நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய் தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இரு முறை ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது இது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் மக்கள் இயக்கம் 3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் விருகம்பாக்கம் தொகுதியில் எஸ்.ஏ. சந்திரசேகர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
மற்ற இரு தொகுதிகளில் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தேர்தலை குறிவைத்தே சில மாதங்களுக்கு முன் விஜய் ரசிகர்மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. குக்கிராமங்களிலும் இதன் கிளைகள் துவக்கப்பட்டது.
மாவட்டந்தோறும் ரசிகர்களை சந்தித்து இந்த இயக்கத்துக்கு விஜய் வலுவூட்டினார். இதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன. விஜய் மக்கள் இயக்கத்தில் 25 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
60 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளும் 40 ஆயிரம் பதிவு செய்யப்படாத அமைப்புகளும் இதில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எஸ்.ஏ. சந்திரசேகர் தி.மு.க. அனுதாபியாக இருந்ததால் விஜய் ரசிகர்கள் அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர். தற்போது அவர்கள் அ.தி.மு.க. பக்கம் சாய்கிறார்கள்.
மக்கள் இயக்கத்துக்கு அ.தி.மு.க. தொகுதிகள் ஒதுக்கினால் விஜய்
பிரசாரத்தில் குதிப்பார் என கூறப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங் களிலும் பேசுவார் என்கின்றனர். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாளில் முடிவாகி விடும்.
Tags : Vijay, Vijay In Politics


Aucun commentaire:
Enregistrer un commentaire